பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஏ320 நியோ ரக விமானங்களை இயக்க வேண்டாம் என விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ள நிலையில், இண்டிகோ, கோ ஏர் நிறுவனங்களின் 48 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.
ஏ320 நியோ ரக விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட இன்ஜின்கள், நடுவானில் பறக்கும்போது செயலிழப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அந்த ரக விமானங்களை இயக்க வேண்டாம் என்று அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் டிஜிசிஏ இரு தினங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்க வேண்டிய 42 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது. இதேபோல, தங்களது நிறுவனத்தின் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கோ ஏர் நிறுவனம் தெரிவித்தது.