தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டம் தொடங்குவற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த ஆய்வகம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகளும் தொடங்கப்பட்டன.
இதற்கிடையே, இந்த ஆய்வகம் அமைப்பதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இத்திட்டத்துக்கு அனுமதி மறுத்தது. இதனால், ஆய்வகம் அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. அனுமதியைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தத் திட்டத்தை முழுமையாக ஏற்பதாகவும், இந்தத் திட்டத்தால் கதிர் வீச்சு அபாயம் இருக்காது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க வேண்டியதில்லை என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.