வெளிநாடு செல்ல அனுமதி கோரி செளதாலா மகன் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் செளதாலாவின் மகன் அபய் செளதாலா வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் செளதாலாவின் மகன் அபய் செளதாலா வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, அபய் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அவருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. அதுதொடர்பான விசாரணையை அபய் எதிர்கொண்டு வருகிறார். இதன் காரணமாக நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்ல இயலாத சூழல் அவருக்கு உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெறும் திருமணம் ஒன்றில் பங்கேற்கச் செல்ல அனுமதிக்கக் கோரி அவர் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதன் மீதான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அபய் செளதாலாவின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
அவரது தந்தை ஓம் பிரகாஷ் செளதாலா ஹரியாணா முதல்வராக இருந்தபோது ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கும், அவரது மற்றொரு மகன் அஜய் செளதாலாவுக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com