சண்டிகர்: பணத்தினைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு ஆள் கடத்தல் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், பஞ்சாபினைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் தலெர் மெஹந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
பஞ்சாபினைச் சேர்ந்தவர் பிரபல 'பாப்' பாடகர் தலெர் மெஹந்தி. தனியாக பாப் ஆல்பங்களை வெளியிட்டுள்ளதுடன், பாலிவுட் படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார். இவர் மீது வெளிநாட்டிற்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தச் செல்லும் பொழுது, இசைக்குழுவினர் என்ற பெயரில் பணம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கடந்த 2003-ஆம் ஆண்டில் பக்ஷிஸ் சிங் என்பவர் பாட்டியாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னிடம் ஒருகோடி ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்ட தலெர் மெஹந்தி, சொல்லியபடி வெளிநாட்டுக்குஅழைத்துச் செல்லவில்லை என்றும், திரும்பக் கேட்ட பொழுது பணத்தினை திரும்ப அளிக்கவில்லை என்றும் புகார் அளித்தார்.
உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலெர் மெஹந்தி கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் பாட்டியாலா நீதிமன்றம் வெள்ளியன்று தலெர் மெஹந்தியை குற்றவாளி என்றுஅறிவித்தது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.