காங்கிரஸ் கட்சியின் 84-ஆவது வருடாந்திரப் பொதுக்கூட்டம் தில்லியில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா பேசியதாவது:
கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரைவத் தேர்தலின் போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளின் 90 சதவீதம் சோனியா, மன்மோகன் சிங் மற்றும் ராகுல் ஆகியோரது வழிகாட்டுதல் மற்றும் ஆசியின் படி நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேவையற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசாமல், மக்கள் நலனுக்குத் தேவையான வாக்குறுதிகளை மட்டுமே காங்கிரஸ் வழங்கும். எனவே தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரைவத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெற்று கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும். காங்கிரஸ் தலைவர் ராகுலின் தலைமையிலான இந்த பிரசாரத்தில் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசாங்கம் நிச்சயம் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அதுபோல அடுத்து 2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ராகுலின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் பதவியேற்பார். இதை யாராலும், எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.