ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரம் கடந்த 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 12 நாள்கள் சிபிஐ காவலில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 12-ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மார்ச் 24-ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எஸ்.பி.கார்க் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, கார்த்தி சிதம்பரத்தை ஜாமீனில் விடுவித்தால், அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, கோபால் சுப்ரமணியம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரிய அதிகாரிகளின் பெயரோ, வேறு அரசு அதிகாரிகளின் பெயரோ இடம்பெறவில்லை. இந்த வழக்கில் வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. கார்த்தி சிதம்பரத்தை மேற்கொண்டு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரவில்லை. எனவே, நீதிமன்ற காவலில் அவரை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை' என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தார்.