பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 23) தில்லியில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னிலை வகிக்கலாம் எனத் தெரிகிறது.
இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பாஜக நாடாளுமன்றக் குழுச் செயலர் பாலசுப்ரமணியம் காமராசு, கட்சி எம்.பி.க்களுக்கு விடுத்துள்ளார்.
தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜகவின் அலுவலகமான தீனதயாள் உபாத்யாய மார்க்கத்தில் முதன்முறையாக நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது. இது அக்கட்சியை சுயபரிசோதனைக்குட்படுத்துவதற்கான நேரம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இத்தகைய சூழலில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் மாவட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதேபோன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு எதிர்க்கட்சிகள் அமளியால் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், இரு அவைகளையும் ஆக்கப்பூர்வமாக நடத்துவது எப்படி? என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.