மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வரி பயங்கரவாதத்துக்கு வித்திட்டது என்று பாஜக அதிருப்தி தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
அருண் குமார் என்ற பொருளாதார ஆய்வாளர் எழுதியுள்ள "பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், கருப்பு பொருளாதாரமும்' என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யஷ்வந்த சின்ஹா பேசியதாவது:
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, வரித் துறை அதிகாரிகள் கெடுபிடியுடன் நடந்துகொள்வதாக, பாஜக குற்றம் சாட்டியது. அதை வரி பயங்கரவாதம் என்றும் அக்கட்சி விமர்சித்தது.
உண்மையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வரி பயங்கரவாதத்துக்கு பாஜக வித்திட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 18 லட்சம் வழக்குகளை வருமான வரித் துறை பதிவு செய்திருப்பதாக பாஜக கூறுகிறது.
இத்தனை வழக்குகளை விசாரிப்பதற்கு வருமான வரித் துறையில் வசதிகள் உள்ளனவா? இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைவதற்கு எத்தனை ஆண்டுகளாகும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி வரும் மத்திய அரசு, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் வரை, வருமான வரித் துறையின் விசாரணயை முடிக்காமல் வைத்திருக்கும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, எதிர்பார்க்கப்பட்ட எந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை. எனினும், கருத்து மோதலில் மத்திய அரசு வெற்றிபெற்று விட்டது.
16-ஆம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட ஒருவரும் (முகமது பின் துக்ளக்) தனது ஆட்சியில் புழக்கத்தில் இருந்த பணத்தை மதிப்பிழக்கச் செய்தார்.
500 ஆண்டுகளுக்கு முன் அந்த அரசர் செய்த அதே தவறை, தற்போது ஒருவர்(பிரதமர் மோடி) மீண்டும் செய்திருக்கிறார் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.