இராக்கில் உயிரிழந்த 39 இந்தியர்களின் உடல்களை அடையாளம் கண்டது எப்படி?

இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு விட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இராக்கில் உயிரிழந்த 39 இந்தியர்களின் உடல்களை அடையாளம் கண்டது எப்படி?


பாக்தாத்: இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு விட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்களின் உடல்கள் இன்னும் 8 முதல் 10 நாட்களில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று கூறியிருந்தார்.

இந்தியாவில் இருந்து சென்ற 40 தொழிலாளர்களையும் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த 2014-இல் கடத்திச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல், வங்கதேசத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்களையும் அந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இந்த நிலையில், இந்தியர்களின் உடல்களை இராக் அரசு எவ்வாறு அடையாளம் கண்டது என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இராக்கின் படோஷ் கிராமத்துக்கு அருகே இருக்கும் வறண்ட மணற்குன்றை, ஐஎஸ் பயங்கரவாதிகள், தங்களது எதிரிகளைக் கொன்று புதைக்கும் சுடுகாடாக பயன்படுத்தி வந்ததாக படோஷ் கிராம மக்கள் அளித்த தகவலின் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து படோஷ் பகுதியில் ஆய்வு செய்தபோது அங்கே ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு ஆணின் உடலில் நீளமான முடியும், கையில் வெள்ளி அணிகலனும் இருந்தது. இது சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களின் அடையாளம் என்பதால் இவர்கள் இந்தியர்கள் என்று கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்களது மரபணுக்கள் இராக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு மரபணு சோதனை மூலமாக இதுவரை 38 இந்தியர்களின் உடல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரைச் சேர்ந்த ஹர்ஜித் மாசி என்பவர் மட்டும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்து விட்டார். அவர் செய்தியாளர்களிடம் ஏற்கெனவே பேசும்போது, மற்ற இந்தியர்களை பயங்கரவாதிகள் கொலை செய்ததை தாம் பார்த்ததாகக் கூறினார். எனினும் அதை மத்திய அரசு அப்போது மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விளக்கம் அளித்துப் பேசினார். அவர் தெரிவித்ததாவது: இராக்கில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்கள் குறித்து மக்களவை ஏற்கெனவே பல முறை விவாதித்துள்ளது. நம்பகமான ஆதாரம் இல்லாமல் அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. 

தற்போது அவர்கள் இறந்து விட்டது தொடர்பான ஆதாரத்தை அவையில் சமர்ப்பிக்க விரும்புகிறேன். 

இந்தியர்களின் கதி என்ன என்று அறிவதற்காக தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ராடார் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. அதன் விளைவாக, படோஷ் நகருக்கு அருகில் உள்ள மிகப்பெரிய இடுகாட்டில் உள்ள மண்மேட்டுக்கு அடியில் இந்தியர்களின் உடல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த உடல்கள் இராக் அரசு அதிகாரிகளின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டன. இராக்கின் மொசூல் நகருக்கு வடமேற்கே உள்ள படோஷ் என்ற கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தில் 39 இந்தியர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அவர்களின் உடல்கள் மரபணுச் சோதனைக்காக இராக் தலைநகர் பாக்தாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அந்தச் சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 38 பேரின் உடல்கள் சோதனையில் 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு இந்தியரின் உடல், மரபணுச் சோதனையில் 70 சதவீதம் பொருந்துகிறது.

இறந்த உடல்களை அடையாளம் காணவும் அவற்றை பாக்தாதுக்கு அனுப்பி வைக்கவும் உதவிய இராக் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உடல்களை சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வருவதற்காக நான் இராக் செல்ல உள்ளேன். 

இந்தியாவுக்கு உடல்கள் வந்ததும் அதே விமானத்தில் பஞ்சாபைச் சேர்ந்த 27 பேரின் உடல்கள் அமிர்தசரஸுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் 4 பேரின் உடல்கள் ஹிமாசலப் பிரதேசகம் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். பிகாரைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் பாட்னாவுக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரின் உடல்கள் கொல்கத்தாவுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார் சுஷ்மா.

வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்ற மோசூல் நகருக்குச் சென்றனர். இவர்களில் 40 பேர் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இராக்கில் கொல்லப்பட்ட தஜிந்தரின் உறவினர் தேவிந்தர் சிங் கூறுகையில், ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பிறகு தொலைபேசியில் தஜிந்தர் எங்களிடம் பேசினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் குரலை நாங்கள் கேட்கவில்லை என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனித்தனியாக தகவல் தெரிவிக்காமல் ஒட்டுமொத்தமாக சுஷ்மாவின் பேச்சை தொலைக்காட்சியில் காண்பித்து, உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு தகவல் கூறுகின்றனர். 

இறந்த இந்தியர்களுக்கு கௌரவமான முறையில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளவும், அவர்களின் குடும்பத்தாருக்கு போதுமான இழப்பீட்டை அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com