சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே (வயது 80), மத்திய பாஜக அரசுக்கு எதிராக தில்லி ராம்லீலா மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளார்.
மகாத்மா காந்திக்கு மரியாதை செய்த பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கிய அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசுக்கு நான் இதுவரை 43 கடிதங்கள் எழுதிவிட்டேன். ஆனால் இதுவரை எதற்கும் பதில் இல்லை. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு சரியான லாபம் கிடைப்பதில்லை. இதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதுபோல நாடு முழுவதும் லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோரிக்கை வைத்தேன். அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வேளாண்துறையில் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அளித்த சீர்திருத்தங்களை அமல்படுத்தவில்லை.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இதுகுறித்து அரசுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் அவை நிறைவேறும் வரை எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும். நீங்கள் இதுவரை அளித்த எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளீர்கள். அதனால் எனக்கு உங்கள் மீது நம்பிக்கையில்லை.
எனவே திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தில் உறுதியாக முடிவு எடுக்க வேண்டும். நான் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவதை விட எனது நாட்டுக்காக உயிர்தியாகம் செய்ய விரும்புகிறேன் என்றார்.