தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது : தில்லி உயர் நீதிமன்றம்

லாபம் பெறும் பதவியை வகித்ததாகக் கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது : தில்லி உயர் நீதிமன்றம்


புது தில்லி: லாபம் பெறும் பதவியை வகித்ததாகக் கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று பிறப்பித்த தீர்ப்பில், எம்எல்ஏக்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்று கூறியிருப்பதோடு, மறுவிசாரணை நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாகக் கூறி தில்லி சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் 20 பேரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

வழக்கின் பின்னணி: அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில், 2015, மார்ச் 13-இல் ஆம் ஆத்மி கட்சியின் 21 எம்எல்ஏக்களை பார்லிமென்ட்ரி செயலர்களாக நியமிக்கும் உத்தரவை தில்லி அரசு பிறப்பித்தது. அவர்கள் தில்லி அமைச்சர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருப்பார்கள் என்று முதல்வர் கேஜரிவால் கூறினார்.

சம்பந்தப்பட்ட 21 எம்எல்ஏக்களும் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் சார்பில் 2016, ஜூன் 9-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 'துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பார்லிமென்ட்ரி செயலராக நியமித்த நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இதனால், இது தொடர்பான முதல்வரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என்று நீதிமன்றம் 2016, செப்டம்பரில் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரஜௌரி கார்டன் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினர் ஜர்னைல் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, 20 எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடர்ந்தது.

பார்லிமென்ட்ரி செயலர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், தங்கள் மீதான ஆதாயப் பதவி விவகார வழக்கு விசாரணையை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபரில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

விசாரணை முடிந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆம் ஆத்மி எல்ஏக்கள் 20 பேரையும், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக பரிந்துரையை அளித்தது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களையும் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.

இதனை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து வந்த தில்லி உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com