புதுதில்லி: ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை முடக்கியம் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
அத்துடன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளது.
இந்நிலையில் வெள்ளியன்று ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கார்த்திக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார்.
அவரது மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.