ஏர்செல்-மேக்சிஸ் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சட்ட விரோத பணப் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்து அதற்கு பிரதிபலன் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் என்று கூறப்படும் அட்வான்டேஜ் ஸ்டராடெஜிக் கன்சல்ட்டிங் பிரைவேட் லிமிடெட் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்தின் வங்கி வைப்புத் தொகை மற்றும் சேமிப்புகள் என ரூ.1.16 கோடியை அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கியது.
இந்நிலையில், இதுதொடர்பாக 171 பக்க உத்தரவு அறிக்கைகளை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் வெளியிட்டது. அதில், நிதி முறைகேட்டில் ஈடுபடவில்லை என்பதை கார்த்தி சிதம்பரம் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய இதர நிறுவனங்கள் நிரூபிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சொத்துகள் அனைத்தின் வழியாகவும் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகின்றன.
இந்த உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர் மேல்முறையீட்டு ஆணையத்தை 45 நாள்களுக்குள் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.