நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்தபோது லஞ்சப் புகாரில் சிக்கிய அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி குர்நாம் சிங்குக்குச் சொந்தமான இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சண்டீகரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனம், கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் ரூ.600 கோடி வரை நிதி திரட்டியது. முதலில், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்காக, அவர்களுக்கு அதிக அளவிலான தொகையைத் திருப்பித் தந்த அந்த நிறுவனம், பிறகு அவர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டது.
இதையடுத்து, இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கை முதன்முதலில் விசாரித்து வந்த அமலாக்கத் துறை முன்னாள் துணை இயக்குநர் குர்நாம் சிங், ஒரு தரப்புக்குச் சாதகமாகச் செயல்பட ரூ.6 கோடி வரை லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அதேபோன்று இந்த விவகாரத்தில் தொடர்புடைய வழக்குரைஞர் புனீத் சர்மா, சண்டீகரைச் சேர்ந்த மற்றொரு நபர் உள்ளிட்டோரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலையில், மோசடி நிதி நிறுவனத்தின் முகவராக இருந்த சண்டீகரைச் சேர்ந்த கமல் கே.பக்ஷி, என்பவர் கைது செய்யப்பட்டதும், அவருக்குச் சொந்தமான ரூ.4.18 கோடி மதிப்புடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.