ஒருங்கிணைந்த பிகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவது தொடர்பான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் போலி ரசீதுகள் தயாரித்து ரூ.900 கோடி ஊழல் புரிந்ததாக லாலு பிரசாத், முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
கால்நடைத் தீவன ஊழல் முதலாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2-ஆவது வழக்கில் மூன்றரை ஆண்டுகளும், 3-ஆவது வழக்கில் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டன.
இந்நிலையில், 4-ஆவது வழக்கிலும் 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாலு பிரசாத் யாதவுக்கு இதுவரை 27.5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
4 வழக்குகளின் தீர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கு தகுந்த மாதிரி எங்கள் செயல்திட்டங்கள் அமையும். அரசியல் லாபத்துக்காக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் திட்டமிட்டு லாலு பிரசாத் யாதவை பழிவாங்கியுள்ளது. இதில் லாலு பிரசாத் யாதவ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.