அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருடன் மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தொலைபேசியில் உரையாடினார். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் இந்தியா திரும்புவார் என்றும் சுரேஷ் பிரபு கூறினார்.
இதுதொடர்பாக, சுரேஷ் பிரபு தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். அவரது உடல் நிலை, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது. அவர் விரைவில் பூரண குணடைந்து தாயகம் திரும்பி, கோவா மாநிலத்தை வழிநடத்திச் செல்வார் என்று நம்புகிறேன் என்று அந்த சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மனோகர் பாரிக்கர், உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கணையத்தில் அழற்சி ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு, கடந்த மாதம் 22-ஆம் தேதி அவர் கோவா மாநிலத்துக்கு வந்தார்.
நிதித் துறையையும் தன் வசம் வைத்திருந்ததால், கோவா சட்டப் பேரவையில் அவர் அன்றைய தினமே மாநில நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அடுத்த சில தினங்களில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 நாள்கள் சிகிச்சைப் பெற்ற அவர், மீண்டும் மும்பை லீலாவதி மருத்துவமனையில் கடந்த 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக, அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
இதனிடையே, கோவாவில் அன்றாட அரசு அலுவல்களைக் கவனிப்பதற்காக, 3 பேர் கொண்ட அமைச்சரவை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.