புதுதில்லி: அரசு வழங்கும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்னை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
முன்னதாக பொதுமக்களின் வங்கிக்கணக்குகள் செல்போன் எண்கள் ஆகியவற்றுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு மார்ச் 31-ந் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஆதார் இணைப்பு கட்டாயம் கிடையாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் ஆதார் வழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்களை இணைப்பதற்கான அவகாசத்தை மார்ச் 31-ந் தேதியில் இருந்து மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்று உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
எனவே முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி அரசின் நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கு ஆதார் எண் இணைப்பிற்கு வரும் 31-ந் தேதிதான் கடைசி ஆகும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், எரிவாயு சிலிண்டர், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மானியம் பெறும் வகையிலான திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை காலக்கெடுவை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.