புதுதில்லி: எல்லா இடத்திலும் கசிவுகள் ஏற்படும் அளவுக்கு பிரதமர் மோடி வலுவிழந்த காவல்காரராக உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சிபிஎஸ்இ தேர்வுகளில் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புக்களுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியாகின. தற்பொழுது மறுதேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற்ற மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (எஸ்.எஸ்.சி) பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் கட்டத் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தன.
அதேபோல் நேற்று முன்தினம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் வாரியத்துக்கு முன்னதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவால் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் எல்லா இடத்திலும் கசிவுகள் ஏற்படும் அளவுக்கு பிரதமர் மோடி வலுவிழந்த காவல்காரராக உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
எத்தனை கசிவுகள்? தகவல் கசிவு! ஆதார் விபரங்கள் கசிவு! எஸ்.எஸ்.சி வினாத்தாள்கள் கசிவு! தேர்தல் தேதி கசிவு! எல்லா இடத்திலும் கசிவுகள் உள்ளது. பிரதமர் மோடி வலுவிழந்த காவல்காரராக உள்ளார்.
இவ்வாறு அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.