இரு தினங்களில் சிபிஎஸ்இ மறு தேர்வு தேதி அறிவிக்கப்படும்: பிரகாஷ் ஜாவடேகர் தகவல்

இரண்டு நாட்களுக்குள் மறு தேர்வுக்கான தேதி குறித்து அறிவிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இரு தினங்களில் சிபிஎஸ்இ மறு தேர்வு தேதி அறிவிக்கப்படும்: பிரகாஷ் ஜாவடேகர் தகவல்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணித பாடம், 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள், சமூகவலைதளங்களில் கசியவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து 10ஆம் வகுப்பு கணித பாடம், 12ஆம் வகுப்பு பொருளியல் பாடம் ஆகியவற்றுக்கு மறு தேர்வு நடத்தப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

குறிப்பிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் குறித்து வெளியான தகவலை சிபிஎஸ்இ தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலித்தது. இதையடுத்து, தேர்வுகளின் புனிதத் தன்மையை காக்கவும், மாணவர்களது நலனைக் கருத்தில் கொண்டு, 10ஆம் வகுப்பு கணித பாடத்துக்கும், 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கும் மறு தேர்வு நடத்துவதென்று சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.  இந்த 2 பாடங்களுக்கும் மறு தேர்வு நடத்தப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இன்னும் இரண்டு நாட்களுக்குள் அடுத்தகட்ட நடவடிக்கையாக மறு தேர்வுக்கான தேதி குறித்து சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்படும். இந்த தேர்வுகள் எவ்வித இடர்பாடுகளுமின்றி சுமூகமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை எனக்கு நன்கு புரிகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் உள்ள அனைத்து சமூக விரோத செயல்களையும் ஒழிப்பது மிகவும் சவாலாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com