224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
லிங்காயத்து தனி மதமாக்கப்பட்டு அவர்களுக்கு சிறுபான்மை மதமாக அது அறிவிக்கப்பட்டது வாக்கு சேகரிக்க காங்கிரஸ் ஏற்படுத்திய திட்டம். இது கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான அரசு அமைவதை தடுக்க காங்கிரஸின் திட்டம்.
எனவே தான் தற்போது ஆட்சியில் இருக்கும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் லிங்காயத்து வாக்குகளை பிரிக்க முயற்சி செய்துள்ளது. ஆனால் இதை லிங்காயத்து மக்கள் நன்கு அறிவார்கள். இவ்விவகாரத்தில் தேர்தலுக்கு பின்னர் பாஜக தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்கும். ஊழலின் உருவமாக காங்கிரஸ் உருவாகியுள்ளது. கர்நாடகத்தில் சித்தராமையா அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர் என்றார்.