பெங்களூரு: உடல்நலக் குறைவால் மரணமடைந்த தனது கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்திருந்த சசிகலா சனியன்று, பரப்பன அக்ராஹாரா சிறைக்குத் திரும்பினார்.
வருமானத்துக்கு அதிகமாகி சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ராஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவரும், 'புதிய பார்வை' இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் கடந்த 19-ந் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் உடல்நல குறைவால் காலமானார்.
இதையடுத்து கணவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா பரோல் கோரினார். அவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அதன்படி சிறையில் இருந்து கடந்த 20-ந்தேதி தஞ்சாவூருக்கு சாலை மார்க்கமாகப் புறப்பட்டார்.
அங்கு கணவரது சொந்த ஊரான விளாரில் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்பொழுது அவர் பரோலில் வந்து 10 நாட்கள் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் சசிகலா சனிக்கிழமையன்று தஞ்சாவூரில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு கார் மூலமாக புறப்பட்டுச்சென்றார். அவருடன் காரில் டி.டி.வி. தினகரனும் உடன் சென்றார். மாலை சுமார் 4 மணியளவில் அவர் மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைக்குத் திரும்பினார்.