பெங்களூரு: இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது என்று கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அவுரத் என்னும் இடத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழன் அன்று துவக்கினார். அதேசமயம் கலபுரகி எனும் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அப்பொழுது இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.அவர் அந்த கூட்டத்தில் பேசியதாவது:
இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள் தீவிரவாத முகாம்கள் மீது ‘துல்லிய தாக்குதல்' நடத்தி நமது ராணுவம், அண்டை நாட்டிற்கு தக்க பாடத்தை புகட்டியது. ஆனால் இதற்கு ஆதாரம் எங்கே என்று காங்கிரஸ் கேட்டது. இதன் மூலம் நமது ராணுவ வீரர்களை காங்கிரஸ் அவமதித்து விட்டது.
துல்லிய தாக்குதலுக்கான ஆதாரத்தை நாங்கள் காங்கிரசுக்கு கொடுக்க வேண்டியது அவசியமா? தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் துப்பாக்கியை கையில் எடுத்து செல்கிறார்கள். அவர்கள் கேமராவை எடுத்து செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்கிறதா? நமது நாட்டு வீரர்களுக்கு, ராணுவ தலைவர்களுக்கு மற்றும் அமைச்சர்களுக்கு இத்தகைய அவமானத்தை காங்கிரஸ் கட்சி ஏராளமாக செய்துள்ளது
காங்கிரஸ் தலைவருக்கு தேசப்பற்றும், தேசிய கீதத்தின் மீது துளியும் மரியாதையும் இல்லை. வந்தே மாதரம் பாடல் ஒலிக்கும் போது காங்கிரஸ் தலைவர் அமர்ந்திருந்திருந்தார். தேர்தல் வரும்போது மட்டும்தான் தலித்துகள் காங்கிரசாரின் நினைவுக்கு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.