பெங்களூரு: கணினித் தலைநகராக இருந்த பெங்களூருவினை குற்றத் தலைநகராக காங்கிரஸ் மாற்றியுள்ளதாக கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அவுரத் என்னும் இடத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழன் அன்று துவக்கினார். அதேசமயம் வியாழன் மாலை கென்கேரி எனும் இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அப்பொழுது கணினித் தலைநகராக இருந்த பெங்களூருவினை குற்றத் தலைநகராக காங்கிரஸ் மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசியாதவது:
காங்கிரஸ் ஊழல் செய்வதில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றவில்லையெனில் தொடர்ந்து உங்களுக்குப் பிரச்சினைகளைத்தான் கொடுப்பார்கள்.
பெங்களூரு அணி பொதுவாக ஏரிகளுக்குப் பெயர் பெற்றது, ஆனால் தற்போது ஏரிகள் அனைத்தும் 'எரியும் ஏரிகள்' ஆகிவிட்டன. பெல்லந்தூர் ஏரியின் நுரைநச்சுக்கள் சாலையில் பரவும் பொழுது அவை அரசின் திறனின்மையைதான் பேசுகிறது.
ஒரு காலத்தில் பூங்கா நகராக இருந்த பெங்களூரு இன்று குப்பை நகரமாக மாறியுள்ளது. பெங்களூரு நகரத்தின் அடிப்படைத் தேவைகளை இந்த அரசு கண்டுகொள்வதேயில்லை. மாநில இளைஞர்கள் தங்களது முயற்சியினால் இதனை 'ஸ்டார்ட்-அப்' கேப்பிடலாக மாற்றினர், ஆனால் காங்கிரஸ் கட்சியோ இதனை 'ஓட்டைப் பானை' கேப்பிடலாக மாற்றியுள்ளது.
அதேபோல பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் இந்த மாநிலத்தில் குறைவில்லை. கணினித் தலைநகரை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர்
மத்திய அரசின் நிதியினை சித்தராமையா அரசு பயன்படுத்துவதில்லை. தற்பொழுது தொங்கு சட்டசபை என்ற புரளியை காங்கிரசே கிளப்பி வருகிறது. இதன் மூலம் பாஜக பெரும்பான்மையில் வெல்லும் என்பது தெரிய வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.