ஆடை தான் காரணம் எனில் குழந்தைகள், முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏன் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாலின பாகுபாடு தொடர்பான ஆய்வறிக்கை குறித்த ஃபிக்கி அமைப்பின் கருத்தரங்களில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணுக்கு தெரிந்த நபரே அவரை பாலியல் வன்கொடுமை செய்தால் அதை எவ்வாறு வெளி நபர்களால் தடுக்க முடியும். ஆடை காரணமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். நான் அவர்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். ஆடை தான் காரணமென்றால் முதியவர்களுக்கும், குழைந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை ஏற்படுவது ஏன்?
இதுபோன்று ஒவ்வொரு 10 பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 7 சம்பவங்கள் அதில் பாதிக்கப்பட்டவருக்கு மிக நெருக்கமானவர்களால் ஏற்படுத்தப்படுவதுதான். இவ்விவகாரத்தில் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் பாகுபாடு பார்க்கப்படக்கூடாது. இதில் மாற வேண்டியது பெண்களின் ஆடையல்ல, ஆண்களின் மனநிலைதான் என்றார்.