புதுதில்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளன
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1952-ம் ஆண்டில் மட்டும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு உருவான அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதன் காரணமாக அரசாங்கத்துக்கு அதிக செலவு ஆகிறது. எனவே நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் வாக்குப்பதிவை நடத்தினால் தேர்தல் செலவை பெருமளவில் குறைக்கமுடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதனை ஆமோதிக்கும் வகையில் ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற யோசனையை பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தியாக வேண்டும்.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளன
இந்த ஆலோசனை தொடர்பான விரிவான அறிக்கை சட்ட குழுவின் மூலம் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.