புதுதில்லி: தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபசார விழாவினை உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு தீபக் மிஸ்ராவுக்கு அடுத்தபடியான நான்கு மூத்த நீதிபதிகளில் முதலாவதாக இருப்பவர் நீதிபதி செல்லமேஸ்வர். இவரது பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 22-ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.
உச்ச நீதிமன்றத்திற்கு தற்பொழுது கோடை விடுமுறை விடப்பட இருப்பதால் தில்லி வழக்கறிஞர் சங்கம் சார்பாக அவருக்கு வியாழன் அன்று ஒரு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று கூறி, நீதிபதி செல்லமேஸ்வர் புறக்கணித்து விட்டார்.
முன்னதாக ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரிவு உபசார விழாவிலும் கலந்து கொள்ள இயலாது என்று நீதிபதி செல்லமேஸ்வர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தீபக் மிஸ்ராவுடன் நீதிபதி செல்லமேஸ்வருக்கு நிலவி வரும் மோதல் போக்கே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.