புதுதில்லி: ஆதார் அட்டையின் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் முடிந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஏ.கே.சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஓய்.சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் கடந்த 4 மாதங்களாக விசாரணை நடந்து வந்தது.
வழக்கு விசாரணையின் பொழுது ஆதார் அட்டையை சிம்கார்ட் வாங்குவதற்கு கட்டாயப்படுத்தி அரசு பிறப்பித்த உத்தரவு தவறாக அமல்படுத்தி விட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் ஆதார் கட்டாயமாக்கும் சட்டத்தை நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது சரியல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆதார் அட்டையின் அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் முடிந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.