திருவனந்தபுரம்: கேரளாவில் மாற்று பாலின காதலர்கள் முதன்முறையாக சட்டப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாகப் பிறந்து பின்னர் மருத்துவ சிகிச்சை மூலமாக ஆணாக மாறியவர். அதே போல் ஆணாகப் பிறந்த சூர்யா தனக்குள் ஏற்பட்ட பெண்மையை உணர்ந்து பெண்ணாக மாறியவர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகமானார்கள்.
ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாட்கள் செல்லச் செல்ல காதலர்களாக மாறியுள்ளனர். சூர்யா தனது மனைவியாக வந்தால், தனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எண்ணிய இஷான், தனது காதலை சூர்யாவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு சூர்யாவும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.
இவர்களது முடிவுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து நண்பர்கள் அனைவரது முன்னிலையிலும் இவர்களது திருமணம் வியாழன் அன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கேரளாவில் மாற்று பாலின காதலர்கள் முதன்முறையாக சட்டப்படி திருமணம் செய்துகொண்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.