பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: ஆய்வு அறிக்கைகளை வெளியிட ரிசர்வ் வங்கி மறுப்பு 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த பண மோசடிக்கு முன்னர் அங்கு நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: ஆய்வு அறிக்கைகளை வெளியிட ரிசர்வ் வங்கி மறுப்பு 

புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த பண மோசடிக்கு முன்னர் அங்கு நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த வருட தொடக்கத்தில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்ஷி இருவரும் ரூ. 13 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் கண்காணிப்பு அமைப்பான ரிசர்வ் வங்கியும் தனிப்பட்ட முறையில் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பான தகவல்களை தெரிவிக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு மனு அளிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, 'நாங்கள் பொதுவாக  வங்கிகளின் கணக்குகளை தணிக்கை செய்வது கிடையாது. இருப்பினும் வங்கிகளின் கணக்குகளை ஆய்வு செய்கிறோம். அத்துடன் ஆபத்துகால அடிப்படையில் மேற்பார்வையும் செய்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கான விபரங்களை கொடுத்து உள்ள ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2011-ம் ஆண்டை தவிர்த்து, 2007 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தேதியை குறிப்பிட்டு உள்ளது.

நடத்தப்பட்ட ஆய்வுகள் தொடர்பான அறிக்கைகளின் நகல்களை தெரிவிக்கும்படி கேட்கப்பட்டதற்கு, ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், அதற்குரிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை சுட்டிக்காட்டி தகவல்களை தெரிவிக்க மறுத்து உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com