புதுதில்லி: புழுதிப் புயலுடன் பெய்த கனமழையின் காரணமாக தில்லியில் விமானம் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. தற்பொழுது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புழுதி புயலுடன் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல ஸ்ரீநகர்-தில்லி இடையிலான தனியார் விமானம் ஒன்று இதன் காரணமாக அமிர்தசரஸ் நகருக்கு திருப்பிவிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மெட்ரோ ரெயில் சேவையிலும் பாதிப்பு நேரிட்டு உள்ளது.