மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஏப்ரல் மாதம் முதல் சிறுநீரக தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வீட்டில் இருந்தபடியே பணி செய்து வந்தார்.
இந்நிலையில், அருண் ஜேட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திங்கள்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. புதுதில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அருண் ஜேட்லி சிகிச்சை குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமைச் செய்தித்தொடர்பாளர், மருத்துவர் ஆர்த்தி விஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அருண் ஜேட்லி மற்றும் அவருக்கு மாற்று சிறுநீரகம் வழங்கியவர் (டோனர்) ஆகியோரது உடல் நிலை சீராகி வருகிறது. இருவரும் விரைவில் குணமடைவர் என்றார்.
முன்னதாக, 2014-ஆம் ஆண்டு நீரிழிவு காரணமாக இரப்பை தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.