பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்த வரை, அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கையை காங்.,-மஜத கூட்டணி எட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் இதுவரை அறிவித்துள்ள முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 12- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகி வருகின்றன. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகிய மூவரும் கூட்டாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக குமாராசாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். செய்தியாளர்கள் சந்திப்பில் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி பேசும் பொழுது ‘ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்துடன், காங்கிரசின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.
அதேசமயம் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவும் ஆளுரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.அவருக்கு ஆளுநர் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 222 இடங்களில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை. அதில் இரவு எட்டு மணி வரை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில், காங்.,-மஜத கூட்டணி 115 இடங்களைப் பிடித்துள்ளது.
இந்த முடிவுகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத கூட்டணி38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளார் இன்னும் 7 இடங்களில் முடிவு அறிவிக்கப்படவில்லை. அவற்றில் 5 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் முன்னனணியில் உள்ளனர். இதுவே தற்போதைய நிலவரமாகும்.