பெங்களூரு: மக்கள் தீர்ப்புக்கு எதிராக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயலுவதாக பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 12- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகின. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயலுவதாக பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். காங்கிரஸ் அரசுக்கு எதிரான மனநிலையே அதன் தோல்விக்கு காரணம். இதன் மூலம் மக்கள் எங்களுக்கு முழு ஆதரவை அளித்துள்ளனர். பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
காங்கிரஸ் முதல்வரான சித்தராமையா தனது சொந்த ஊரிலேயே தோல்வியடைந்துள்ளார். ஆனால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயலுகிறது. இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
தனிப்பெரும்பான்மையுடன் இருக்கும் பாரதிய ஜனதாவைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானவுடன் ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.