முடிவெடுப்பது ஆளுநர் கையில்தான் உள்ளது: காங்கிரஸ், மஜத., கூட்டாக பேட்டி
பெங்களூரு: ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டு விட்டது; இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில் உள்ளது என்று காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகின. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பாக மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டு விட்டது; இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில் உள்ளது என்று காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகிய மூவரும் கூட்டாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக குமாராசாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் மூவரும் கூறியதாவது:
சித்தராமையா பேசும் பொழுது ‘கோவா உள்ளிட்ட மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க முயன்றது போல, கர்நாடகாவிலும் பாஜக முயற்சிகள் செய்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெற விட மாட்டோம்’ என்று தெரிவித்தார்.
மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி பேசும் பொழுது ‘ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்துடன், காங்கிரசின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, 'ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டு விட்டது; இனி முடிவெடுப்பது ஆளுநர் கையில் உள்ளது' என்று தெரிவித்தார்.