கர்நாடகாவில் ஆட்சி அமைவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று காலை பாஜக, காங்கிரஸ் மற்றும் மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது.
இதில், மஜத கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மஜத கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்று கர்நாடக தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் பங்கேற்காத 2 சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடப்பா நாயகா மற்றும் வெங்கட ராவ் நடாகௌடா ஆவர்.
இதே போல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 78 உறுப்பினர்களில் 66 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 12 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பாஜகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 10 சட்டமன்ற உறுப்பினர்களே தேவை என்பதால் குதிரைப் பேரம் நடைபெற வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் - மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்காதது பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.