ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் தேவிப்பட்டினத்தில் இருந்து கொண்டமொதலு வரை சென்று கொண்டிருந்த படகு செவ்வாய்கிழமை மாலை 3:30 மணியளவில் விபத்துக்குள்ளானது. அங்கு ஏற்பட்ட புயல் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அந்த படகில் பயணம் செய்த 40 பேரில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் தேடும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக சுமார் 20 குடும்பங்கள் தொடர்பு கொண்டுள்ளதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சம்பவ இடத்துக்கு புதன்கிழமை நேரில் சென்று பார்வையிடுகிறார். முன்னதாக, விபத்து நடந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை உடனடியாக தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார். மேலும் புதன்கிழமை அதிகாலை இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.