கொச்சி: வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் போனில் பேசுவது குற்றம் அல்ல என்று கேரள உயர் நீதிமன்றத்தின் அமர்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 16 அன்று அதிவேகமாக கார் ஒட்டியதாகவும், வாகனம் ஓட்டும் பொழுது மொபைல் போனில் பேசியதாகவும், கேரள காவல்துறை சட்டப் பிரிவு 118 (e ) -ன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த சட்டப் பிரிவானது பொதுமக்களுக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவோ அல்லது பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலோ தெரிந்தே செய்யப்படும் செயல்களுக்கு தணடனை அளிப்பதை வலியுறுத்துகிறது.
ஆனால் தன் மீது குறிப்பிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும், வாகனம் ஓட்டும் பொழுது மொபைல் போனில் பேசுவது என்பதை இந்த சட்டப்பிரிவுகளின் கீழ்வராது என்று கூறியும் சந்தோஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி ஒருவர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி நீதிபதிகள் ஷபீக் மற்றும் சோமராஜன் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் போனில் பேசுவது என்பது பொதுமக்களுக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவோ அல்லது பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலோ உள்ள செயல் என்பதற்கான தெளிவான சட்ட உள் பிரிவுகள் எதுவும், கேரள காவல்துறை சட்டப் பிரிவு 118 (e ) -இல் இல்லை . எனவே சந்தோஷ் மீது வழக்கு தொடர்வது என்பது இயலாத செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.