ராய்ப்பூர்: இந்திய சட்டத்துறையின் நிலைமை பாகிஸ்தானைப் போலாகி விட்டது என்று காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற பொதுமக்கள் சுயராஜ்யம் தொடர்பான மாநாடு ஒன்றில் பேசிய அவர், அப்பொழுது கூறியதாவது:
நமது அரசியல் அமைப்புச் சட்டம் தற்பொழுது கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பொதுவாக மக்கள்தான் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தினை நாடுவார்கள். ஆனால் நாடு சுதநதிரம் பெற்ற 70 ஆண்டுகளில் முதன்முறையாக நீதிபதிகள் மக்களை நாடி வருகிறார்கள்.
செய்தியாளர் சந்திப்பில் தாங்கள் மிரட்டப்படுவதாக கூறுகிறார்கள். தங்கள் பணியினைச் செய்ய இயலாமல் தடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். பொதுவாக இத்தகைய சம்பவங்கள் சர்வாதிகார நாடுகளில்தான் நடக்கும். இது முன்னர் ஆப்பிரிக்காவில், பாகிஸ்தானில் நடந்துள்ளது. தற்பொழுது முதன்முறையாக நமது நாட்டிலும் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.