டைமண்ட் ஹார்பர்: மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த உறவினரிடம் தோல்வி அடைந்ததால், பாஜக வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடந்து முடிந்த மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வியாழன் அன்று வெளியாகின. இதில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் கீழ் வரும் பதர்ப்ரதிமா பகுதியின் 54-ஆவது வார்டில், பாரதிய ஜனதா கட்சி சார்பாக சாதனா சமந்தா (27) என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக சாதனாவின் அத்தையான சுஜாதா சமந்தா என்பவர் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகளில் சுஜாதா சமந்தா வெற்றி பெற்றார். தோல்வியின் காரணமாக சாதனா மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். சிறிதுநேரத்தில் அவரை எங்கும் காணவில்லை. சற்று நேரத் தேடுதலுக்கு பின்னர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரை உடனடியாக குடம்துரா சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் விஷமருந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நிலைமை மோசமானதால் அவர் அங்கிருந்து டைமண்ட் ஹார்பர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி சாதனா வியாழன் இரவு மரணமடைந்தார். இந்த செய்தி குறிப்பிட்ட கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.