பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய ஒருவர் நியமனம்: செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஒரு வார கால அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வெளிப்படையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தும் வகையில் நடத்தவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் வரை, எடியூரப்பா அரசு கொள்கை முடிவு எடுக்கத் தடை விதிப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா அரசு எந்த நியமன எம்எல்ஏவையும் நியமிக்கக் கூடாது என்றும், மூத்த எம்எல்ஏ ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏவான கே.ஜி. போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்து ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கே.ஜி. போபையா நியமனம்: செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
போபையா 2009 முதல் 2013 வரையில் கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்தவர். அப்பொழுது நடைபெற்ற எடியூரப்பா அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது சர்ச்சைக்குரிய வகையில் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானவர்
மேலும் வயது மூப்பு அடிப்படையில் 8 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி. தேஷ்பாண்டேவிற்கு முன்னுரிமையை கொடுக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து கே.ஜி. போபையா நியமனம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் தற்காலிக சபாநாயகரின் பொறுப்பானது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் தற்காலிக சபாநாயகரின் அதிகாரம் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருக்கவே உதவும் வகையில் இருக்கும். மேலும் சட்டத்தின் தடைகளை தடுக்க உதவுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
எனவே கே.ஜி.போபையா நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.