பெங்களூரு: பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் ஆளுநர் வஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்துள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ், மஜத. கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பை சனிக்கிழமையன்று நடத்த உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டு, புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
பின்னர் மாலை 4 மணிக்கு அவை கூடியதும் நம்பிக்கை வாக்களிக்க கோரும் முன் முதல்வர் எடியூரப்பா அவையில் உணர்ச்சிமிகு உரையாற்றினார். முடிவில் போதிய பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் ஆளுநர் வஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்துள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
எடியூரப்பா பதவி விலகிய பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
நீதித்துறைக்கு எனது நன்றியம் பாராட்டுகளும். இது ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள வெற்றி. இந்திய அரசியல் அமைப்புக்கு கிடைத்துள்ள வெற்றி. பாஜகவுக்கு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லை என்று ஆளுநருக்குத் தெரியும். இருந்த போதிலும் ஆட்சியமைக்க அழைத்ததுடன், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை உடைக்க இரு வார கால அவகாசமும் கொடுத்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பணம், பதவி மற்றும் ஆசை வார்த்தைகள் கூறி இழுக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அது நடை பெறவில்லை.
எங்களுக்கு தற்பொழுது 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. எங்களை ஆட்சியமைக்க விரைவில் ஆளுநர் அழைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.