மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவையில் ஜூன் மாதம் நடைபெறும் பேரணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கோவையில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் பேரணிக்கு அழைப்பு விடுக்க கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய பிறகு கமல்ஹாசன் பினராயி விஜயனை கமல்ஹாசன் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியது,
"ஜூன் 1-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவையில் நடைபெறும் பேரணிக்கு அழைப்பு விடுப்பதற்காக அவரை சந்தித்தேன். அவர் இந்த அழைப்பை கருத்தில் கொள்வதாக தெரிவித்தார். ஆனால், அவர் எனது நேரத்தை பார்த்து தான் வருவது குறித்து உறுதியளிக்க முடியும் என்றார்.
கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் பாசிச படைகளுக்கு எதிரான வெற்றி.
கம்யூனிஸ்ட் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்றார்.
முன்னதாக, பினராயி விஜயன் கடந்த மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த போது கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்தார். பின்னர், நீட் தேர்வில் கேரளா சென்ற தமிழக மாணவர்களுக்கு ஆதரவு அளித்தற்காக பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார். பினராயி விஜயன் தனது ஆலோசகர் என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன் அரசியலில் களமிறங்குவதற்கு முன் ஆலோசனை கேட்ட தலைவர்களுள் பினராயி விஜயனும் ஒருவர்.