புதுதில்லி: கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி சார்பாக குமாரசாமி முதல்வராக பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றுள்ள தனிக்கட்சி என்ற முறையில் பாஜகவுக்கு ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
ஆனால் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக மே 19-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சியில் நேரலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோராமல் உருக்கமாகப் பேசி தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து பாஜகவின் ஆட்சி 56 மணிநேரத்தில் முடிவுக்கு வந்தது. பிறகு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி சார்பாக குமாரசாமி ஆட்சியமைக்கக் கோரினார். ஆளுநரும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். மே 23ம் தேதி குமாரசாமி பதவியேற்பதாக முடிவானது.
இந்நிலையில் குமாரசாமி முதல்வராக பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய இந்து மகாசபை என்ற அமைப்புதான் கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் அமையவிருக்கும் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. ,
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தன் மனுவில் கூறியுள்ளது. வழக்கறிஞர் வருண் குமார் சின்ஹா என்பவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் குமாரசாமியை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு செய்துள்ளது. அத்துடன் இதனை அவசர மனுவாக கருதி விசாரணையை அவசரமாக நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.