பெங்களூரு: பாரதிய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ போலியானது என்று அக்கட்சியினைச் சேர்ந்த எம்.எல்.ஏவே மறுப்பு தெரிவித்திருப்பதால், காங்கிரஸ் கட்சி தர்ம சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த பொழுது நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக நடந்து கொள்வதற்காக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை வாங்க பாஜக முயற்சி செய்தது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அத்துடன் காங்கிரஸ் வரிசையாக குதிரை பேர ஆடியோக்கள் சிலவற்றையும் வெளியிட்டது.
அவற்றில் எல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சிவராம் ஹெப்பூரின் மனைவியிடம் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, எடியூரப்பாவின் ஆதரவாளர் புட்டசாமி ஆகியோர் தனித்தனியாக செல்போனில் தொடர்பு கொண்டு குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவையும் காங்கிரஸ் வெளியிட்டது. அந்த ஆடியோவில் ரூ.15 கோடி அல்லது ரூ.5 கோடியுடன் மந்திரி பதவியை தருவதாக விஜயேந்திரா, புட்டசாமி இருவரும் சிவராம் ஹெப்பூரின் மனைவியிடம் பேரம் பேசுகிறார்கள்.
அதே சமயம் சிவராம் ஹெப்பூரின் மனைவி தனது மகன் விவேக் ஹெப்பூர் மீதுள்ள வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் இருவரிடமும் கூறுவதாகவும், அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்வதாகவும் அந்த ஆடியோவில் இருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவராம் ஹெப்பூர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் தனது மனைவியுடன் பா.ஜனதா தலைவர்கள் பேசியதாக வெளியான ஆடியோவை பற்றி அவர் கூறியுள்ளதாவது:
குதிரை பேர ஆடியோவில் ஈடுபட்டதாக வெளியான செல்போன் உரையாடலில் இருப்பது எனது மனைவியின் குரல் அல்ல. எனது மனைவி இதுபோல் எந்த வித செல்போன் அழைப்பையும் ஏற்றுப் பேசவில்லை. எனது மனைவியுடன் பாஜகவின குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வெளியான ஆடியோ போலியான ஒன்று. இச்செயலை நான் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோ போலியானது என்று அக்கட்சியினைச் சேர்ந்த எம்.எல்.ஏவே மறுப்பு தெரிவித்திருப்பதால், காங்கிரஸ் கட்சி தர்ம சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.