சிம்லா: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் பொழுது தனக்கு அளிக்கப்படவிருந்த கவுரவ டாக்டர் பட்டத்தினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாள் பயணமாக ஞாயிறன்று இமாச்சலப்பிரதேசம் மாநிலத் தலைநகர் சிம்லாவுக்கு மனைவி சவிதாவுடன் வருகை தந்தார். அவர்களை மாநில கவர்னர் ஆசார்யா தேவ்ரத் மற்றும் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோர் வரவேற்றனர்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக சிம்லா நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோலான் மாவட்டத்தில் உள்ள நவ்னி பகுதியில் அமைந்துள்ள, டாக்டர் ஒய்.எஸ்.பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகத்தில் திங்களன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அவருக்கு அறிவியல் துறை சார்ந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கான குறிப்புகள் அடங்கிய பட்டயம் வாசிக்கப்பட்ட பின்னர், கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுகொள்ள இயலாது ராம்நாத் கோவிந்த் மறுத்து விட்டார்.
இந்த பட்டத்தை பெற்றுகொள்வதற்கான துறைசார்ந்த தேர்ச்சி தனக்கு இல்லாததால் கொள்கை அடிப்படையில் இந்த பட்டத்தை ஏற்றுகொள்ள விரும்பவில்லை என்று அவர் தனது உரையின்போது குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.