அருணாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக விமான சேவை திங்கள்கிழமை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலைன்ஸ் ஏர் நிறுவனத்தில் 42 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் எர்கிராஃப்ட் விமானம் முதன்முறையாக இயக்கப்பட்டுள்ளது. பாஸிகட் என்ற இடத்தில் அமைந்துள்ள விமானநிலையத்தில் மதியம் 2.15 மணியளவில் குவாஹட்டியில் இருந்து வந்திறங்கிய இந்த விமானத்தில் மாநில முதல்வர் பீமா கண்டு உள்ளிட்ட 25 பயணிகள் பயணம் செய்தனர்.
மொத்தம் 120 ஹெலிபேட்கள் உட்பட நவீனமயமான 10 இறங்குதளங்களுடன் அமைந்துள்ள இந்த விமான நிலையம், ராணுவ சேவைக்காகவும் பயண்படுத்தப்படவுள்ளது. முதலாவதாக இவ்வழியாக கொல்கத்தா முதல் குவாஹட்டி வரையிலான பயணிகள் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 3 தினங்கள் விமானங்கள் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா கண்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறினார்.