பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளது.
முன்னதாக கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே? இதில் என்ன புதிய விஷயம் இருக்கிறது.. என்று கேட்கலாம். இது மட்டுமல்ல.. சொல்லப் போகும் விஷயமும் புதிது அல்ல. பழைய விஷயம்தான். ஆனால் இப்போது ஏதோ நினைவுக்கு வருகிறது.
அது என்னவென்று பார்க்கலாம்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இரண்டு மாத காலம் இருந்த நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்று திடீரென நினைவில் வந்தது.
அதில் கூட்டணி குறித்து குமாரசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், பாஜகவை விட காங்கிரஸ் மிக மோசமானது. பாஜக எனும் பி டீம் என்று குறிப்பிட்ட குமாரசாமி, கர்நாடக அரசியல் பற்றி ராகுல் காந்திக்கு ஏபிசிடி கூட தெரியாது என்று கூறியிருந்தார்.
சரிதான்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.. இப்போ அதெல்லாம் நமக்கெதற்கு? காங்கிரஸ் - மஜத தலைமையிலான கூட்டணி அரசின் சார்பில் கர்நாடக முதல்வராக குமாரசாமி 23ம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் சட்டப்பேரவையில் குமாரசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது மட்டுமே நினைவில் கொள்ளத்தக்கது.