உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது பொய் வழக்கு போடுவதற்கு சதித் திட்டம் தீட்டியதாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதாகியுள்ள அந்த எம்எல்ஏ, தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கும் அவரது சகோதரர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 18 வயது பெண் ஒருவர் போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.
அந்தப் புகாரை போலீஸார் வாங்க மறுத்ததை அடுத்து, லக்னெüவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு முன்பு அப்பெண் தீக்குளிக்க முயன்றார்.
அதற்கு முன்னதாக, எம்எல்ஏவின் சகோதரரை தாக்கியதாக அப்பெண்ணின் தந்தை மீது போலீஸார் ஏப்ரல் 3-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இரு தினங்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து, அவர் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவருடைய உடலில் பலத்த காயங்கள் இருந்ததாக, அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மாகி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் துறை துணை ஆய்வாளர்கள் அசோக் சிங் பதூரியா, கம்தா பிரசாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஆதாரங்களை அழித்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.