மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிராமப்புற மக்கள் மீது அக்கறை கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாரம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை, விளம்பரத்துக்காக ரூ.3,755 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது. ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை, கிராமப்புறங்களில் குறைந்தபட்ச கூலித் தொகை இன்னும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.
உண்மையில், கிராமப்புற மக்களை மத்தியில் ஆளும் அரசு புறக்கணிக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் 19 நாள்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்தவுடன் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு ஏன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது? தேர்தல் முடிந்தவுடன் தினந்தோறும் ஏன் விலை உயர்த்தப்படுகிறது? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசிடம் இருந்து விளக்கம் இல்லை.
மத்திய அரசு தங்களது சுயநலத்துக்காக கர்நாடக தேர்தல் வரை பெட்ரோல் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், மக்களை மூடர்களாக்குவதற்காக, எரிபொருள்களின் விலை அரசு நிர்ணயம் செய்வதில்லை என கூறுகிறார்கள் என்று அந்த பதிவில் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.