தில்லி: நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுமாறு தேவாலயங்களுக்கு தில்லி பேராயர் அனுப்பிய சுற்றறிக்கை, மத்திய அரசுக்கு எதிரானதா என்ற கேள்வியால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கடந்த திங்களன்று புதுதில்லி பேராயர் அனில் கவுடோ தில்லியில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நகரம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில் இந்திய நாட்டின் நலனுக்காக கிறிஸ்துவ சமுதாயம் வெளிக்கிழமை பிரார்த்தனை நடத்த வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். இது மத்திய அரசுக்கு எதிரானதா என்ற கேள்வியால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
சர்ச்சைக்குக்குரிய அந்த சுற்றறிக்கையில் பேராயர் அனில் கவுடோ கூறி இருந்ததாவது:-
நமது அரசியலமைப்புக்கும், நமது நாட்டின் மதச்சார்பற்ற நிலையிலும் உள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு ஒரு அச்சுறுத்தலை உருவாக்கும் வகையிலும்,ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை நாம் தற்பொழுது பார்க்கிறோம்.
நாம் 2019 ஆம் ஆண்டை நோக்கி முன்னேறும்போது, புதிய அரசாங்கம் வேண்டும். எனவே நமது நாட்டிற்காக ஒரு பிரார்த்தனை பிரச்சாரத்தை ஆரம்பிப்போம். நம்மையும் நம் நாட்டையும் புனிதமாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த சுற்றறிக்கையானது இந்திய மதசார்பின்மை மற்றும் ஜனநாயகம் மீதான நேரடித் தாக்குதல் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. அதே சமயம் பேராயரின் இந்த அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மோடி அரசாங்கத்தின் மீதான நேரடி தாக்குதல் எனவும் பாஜக வட்டாரங்களில் கூறப்படுகிறது.